2013-03-25 16:30:30

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய இரு நூல்களின் இத்தாலிய மொழிபெயர்ப்பு


மார்ச்,25,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோது, இஸ்பானிய மொழியில் எழுதிய இரு நூல்களின் இத்தாலிய மொழிபெயர்ப்பு மார்ச் 26, இச்செவ்வாயன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Guarire dalla corruzione அதாவது, ஊழலைக் குணமாக்குதல் மற்றும் Umiltà, la strada verso Dio அதாவது, தாழ்ச்சி, இறைவனை அடையும் வழி என்ற இரு தலைப்புக்களில் கர்தினால் Jorge Maria Bergoglio அவர்களால் எழுதப்பட்ட இவ்விரு நூல்களையும் இத்தாலிய மறைபரப்புப் பணியாளர் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
உரோம் நகரில் அமைந்துள்ள La Civiltà Cattolica என்ற இயேசு சபையினரின் இல்லத்தில் நடைபெறும் இவ்விழாவில், ஊடகத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர்.
2005ம் ஆண்டு Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்றில் வெளியிடப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து எழுதப்பட்ட இந்நூல்கள் ஆர்ஜென்டீனா நாட்டில் பரவலாகக் காணக்கிடக்கும் ஊழலை ஒழிக்கும் வழிகளைப் பற்றியும், இறைவனை அடைவதற்கு தாழ்ச்சியே சிறந்த வழி என்றும் எடுத்துரைகின்றன.ஆதாரம்- வத்திக்கான வானொலி







All the contents on this site are copyrighted ©.