யாழ்ப்பாண ஆயர் : இலங்கையின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் காமன்வெல்த் நாடுகளுக்கு
முக்கிய அங்கம் உள்ளது
மார்ச்,23,2013. இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் காமன்வெல்த் நாடுகள்
முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் கூறினார். காமன்வெல்த்
நாடுகளின் அமைப்புக்கான கானடாவின் சிறப்புப் பிரதிநிதி Hugh Segalஐச் சந்தித்தபோது இவ்வாறு
கூறினார் ஆயர் தாமஸ். இலங்கையின் வட பகுதியில் போருக்குப் பின்னர் காணப்படும் நிலைமைகளை
விளக்கிய ஆயர் தாமஸ், தமிழர்களின் அரசியல்ரீதியான எதிர்பார்ப்புக்களுக்குத் தீர்வு காண்பதில்
தாமதம் ஏற்படுவதால், மக்கள் மத்தியில் பதட்டநிலைகள் காணப்படுகின்றன எனவும் கூறினார். போரின்
இறுதிக்கட்டத்தில் பெருமளவான அப்பாவி குடிமக்கள் காணாமற்போயினர் என்றும், நூற்றுக்கணக்கான
தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையின்றி இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், வேலைவாய்ப்புகள்
மற்றும் கல்விக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்போது பாரபட்சம் காட்டப்படுகின்றது என்றும்
யாழ்ப்பாண ஆயர், கானடா பிரதிநிதியிடம் விளக்கினார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர்
அதிகரித்து வருகின்றனர் மற்றும் வடபகுதியில் இராணுவம் மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றது
என்றும் ஆயர் தாமஸ் கூறினார்.