கத்தோலிக்கத் திருஅவைமீதான தொடர் தாக்குதல்கள், அதன் நற்பணிகளை நிறுத்த முடியாது
மார்ச்,23,2013. கத்தோலிக்கத் திருஅவைமீதான சில கோட்பாட்டாளர்கள் மற்றும் சில மேற்கத்திய
ஊடகங்களின் தொடர் தாக்குதல்கள், உலகில் கத்தோலிக்கத் திருஅவையின் நற்பணிகளைத் துடைத்தழிக்க
முடியாது என்று நைஜீரியா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார். SMA
என்ற ஆப்ரிக்க மறைபோதக சபையினர் நைஜீரியாவில் மறைப்பணியாற்றி வருவதன் 150ம் ஆண்டு நிறைவாக,
நன்றித் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Kaigama இவ்வாறு கூறினார். கத்தோலிக்கத் திருஅவை
பற்றி சில விமர்சகர்கள் கூறும் கருத்துக்களால், பிரமாணிக்கமுள்ள விசுவாசிகளும் கத்தோலிக்கத்தை
வெறுப்பதற்குச் சோதிக்கப்படுகின்றனர் என்றுரைத்த ஜோஸ் நகரப் பேராயர் Kaigama, ஆயினும்
திருஅவையின் நற்பணிகளை யாராலும் மறைக்க முடியாது என்று கூறினார். உலகில் கத்தோலிக்கத்
திருஅவையின் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட குருக்கள், 5 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆயர்கள்,
10 இலட்சத்துக்கு மேற்பட்ட அருள்சகோதரிகள் ஆகியோர் ஆற்றும் நற்பணிகள் மீது துர்மாதிரிகையை
விதைக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு
மேற்பட்ட பள்ளிகள் மற்றும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் நலவாழ்வு நிறுவனங்கள் கத்தோலிக்கத்
திருஅவையால் நடத்தப்படுவதையும் பேராயர் Kaigama குறிப்பிட்டார்.