2013-03-22 16:32:16

முதுபெரும் தலைவர் Sabbah : பெரிய தலைவர்களின் வருகை புனிதபூமியின் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை


மார்ச்,22,2013. உலகின் அனைத்துப் பெரிய தலைவர்களும் புனிதபூமிக்கு வருகை தந்து மக்களைப் பார்வையிடுகிறார்கள், ஆனால் அவர்களின் வருகை புனிதபூமியின் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்று எருசலேமின் முன்னாள் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Michel Sabbah குறை கூறினார்.
இந்நாள்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருவது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த முதுபெரும் தலைவர் Sabbah இவ்வாறு கூறினார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையைப் பொருத்தவரை, வெளிச்சக்திகளால் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்று முதுபெரும் தலைவர் Sabbah தெரிவித்தார்.
பனித வாரம் தொடங்கவிருப்பது குறித்தும் பேசிய அவர், எருசலேமிலுள்ள புனித இடங்களுக்கு, பாலஸ்தீனக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எளிதாகச் செல்ல இயலாத நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.