திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், இறைவன் நமக்கு நல்லதொரு
ஆயரை வழங்கியுள்ளார் - அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு
மார்ச்,21,2013. நாம் ஒரு வரலாற்று நிகழ்வுக்குச் சாட்சிகளாய் உள்ளோம், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் வடிவில், இறைவன் நமக்கு நல்லதொரு ஆயரை வழங்கி நம்மை ஆசீர்வதித்துள்ளார் என்று
அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது. திருத்தந்தை தேர்ந்துள்ள பெயரே
அமைதியையும், படைப்பு அனைத்தின் மீது அக்கறையையும் உறுதி செய்கிறது என்று கூறியுள்ள இவ்வமைப்பின்
தலைவர்கள், புதிய திருத்தந்தைக்கு தங்கள் முழு ஆதரவும் உண்டு என்று உறுதி அளித்துள்ளனர். 66
நாடுகளில் பணிபுரியும் 50 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில உலக கத்தோலிக்கப் பெண்கள்
அமைப்பு, வறுமை ஒழிப்பு, உயிர்களின் பாதுகாப்பு ஆகிய பணிகளில் திருத்தந்தைக்கு முழு ஆதரவு
அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளது. மனித வர்த்தகம் உட்பட்ட பல்வேறு வன்முறைகளுக்குப்
பலியாகும் பெண்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ், பேராயராகப் பணியாற்றிய காலத்தில் குரல்
கொடுத்துள்ளார் என்று கூறும் இவ்வமைப்பினர், தொடர்ந்து பெண்களின் அனைத்து நலன்களிலும்
திருத்தந்தை அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.