திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கொண்டாடப்படும்28வது உலக
இளையோர் நாள்
மார்ச்,21,2013. மார்ச் 24ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 28வது உலக இளையோர்
நாள், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்.28,19) என்ற மையக்கருத்துடன்
கொண்டாடப்படும். இந்நாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பகல்
9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், நடைபெறும் குருத்தோலை பவனியிலும்,
திருப்பலியிலும் இளையோர் பெருமளவில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,
இப்புதனன்று காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த கிறிஸ்தவரல்லாத
பிற மதங்களின் பிரதிநிதிகள் குறித்த பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு
மதங்களைச் சார்ந்த 24 பிரதிநிதிகள் அல்ஜீரியா, சிரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜப்பான்
ஆகிய பல நாடுகளிலிருந்தும் வந்திருந்தனர். இஸ்லாமியர் 9 பேர், புத்த மதத்தினர் 10
பேர், சமண மதத்தவர் ஒருவர், சீக்கிய மதத்தினர் இருவர் ஆகியோருடன், பெல்ஜியம் நாட்டில்
உள்ள சைவ சித்தாந்த உலக அவையின் தலைவர் சுவாமி ஜீவன்முக்தா கணபதி, இந்து மதத்தின் பிரதிநிதியாக
இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.