திருத்தந்தையுடன் இயேசு சபை அகில உலகத் தலைவரின் முதல் சந்திப்பு
மார்ச்,20,2013. இயேசு சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பணியும், இயேசு சபையின்
அனைத்து செல்வங்களும் திருஅவையின் பணிக்கே என மீண்டும் ஒருமுறை அர்ப்பணிக்கிறோம் என்று
இயேசு சபையின் அகில உலகத் தலைவர் திருத்தந்தையிடம் தெரிவித்தார். இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தையைத்
தனிப்பட்ட முறையில் சந்தித்த இயேசு சபை தலைவர் Adolfo Nicolas, இச்சந்திப்பின்போது, மிக
எளிய முறையில் தன்னுடன் திருத்தந்தை பழகியதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். இயேசு சபையின்
தலைமை இல்லத்திற்கு திருத்தந்தையை அழைத்தபோது, அவர் கூடியவிரைவில் அங்கு வருவதாகக் கூறியதையும்
அருள்தந்தை Nicolas நினைவு கூர்ந்தார். இதற்கிடையே, இயேசு சபையின் தென் கிழக்குப்
பகுதியின் தலைவராக பணியாற்றும் அருள்தந்தை Edward Mudavassery, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பணிக்காலத்தில், திருஅவை அதிகாரப் பகிர்வில் அதிகம் வளரும் என்ற தன் நம்பிக்கையை
வெளியிட்டார். வத்திக்கானில் செயலாற்றும் பலரும் இன்னும் எளிய முறையில் செயலாற்றி,
அனைத்து மக்களையும் வரவேற்கும் பாங்கினை வளர்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார்
அருள்தந்தை Mudavassery.