குரலிழந்த குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை
பிரான்சிஸ் குரல்கொடுப்பார் - FAOவின் தலைமை இயக்குனர்
மார்ச்,20,2013. பசி, உணவு பற்றாக்குறை, மற்றும் கொடிய வறுமை ஆகியவற்றை உலகினின்று நீக்க
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலையீட்டை நாங்கள் நம்பியிருக்கிறோம் என்று ஐ.நா. உயர்
அதிகாரி ஒருவர் கூறினார். இச்செவ்வாயன்று வத்திக்கானில் இடம்பெற்ற திருத்தந்தையின்
பணியேற்பு விழாவில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சார்பில் கலந்துகொண்ட ஐ.நா.வின்
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் Jose’ Graziano da Silva செய்தியாளர்களிடம்
பேசுகையில் இவ்வாறு கூறினார். வலுவிழந்த, குரலிழந்த குழந்தைகள், பெண்கள் ஆகியோரின்
சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் குரல்கொடுப்பார் என்று நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்
என்று Graziano da Silva கூறினார். பணியேற்புத் திருப்பலிக்குப் பின், தான் திருத்தந்தையைச்
சந்தித்தபோது, ஏழைகளின் சார்பில் உழைக்கும் வத்திக்கானின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும்
இருக்காது என்று திருத்தந்தை தன்னிடம் உறுதி அளித்ததாகவும் FAO இயக்குனர் கூறினார்.