2013-03-18 16:12:34

குடும்ப வன்முறை புகார் : சென்னைக்கு முதலிடம்


மார்ச்,18,2013. மாநில அளவில், குடும்ப வன்முறை தொடர்பான புகார் பதிவில், சென்னை முதலிடத்திலும், ஈரோடு மாவட்டம், இரண்டாவது இடத்திலும் உள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் 5 ஆண்டுகளில், சமூகநல பாதுகாப்பு அலுவலர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. குடும்ப வன்முறை, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார், வரதட்சணை கொடுமை ஆகியவை தொடர்பாக, 2300 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 2050 புகார்கள் தீர்வு காணப்பட்டு, தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கி, சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை புகார் பதிவில், ஈரோடு மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 1158 புகார்கள் பெறப்பட்டு, 730 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமூகநல அலுவலர் ஒருவர் கூறுகையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளால், பாதிக்கப்படும் பெண்கள் சட்ட உதவிகளை பெறமுடியும் எனவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு, மனநல அலுவலர், சமூக ஆர்வலர்கள் முறையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.