கர்தினால் Vallini : திருத்தந்தை பிரான்சிஸ் வரவிருக்கும் ஆண்டுகளில் நற்செய்தியின் வழிகளில்
நம்மை வழிநடத்துவார்
மார்ச்,15,2013. உலகின் 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து திருஅவைத் தலைவர்களும், பல அனைத்துலக நிறுவனங்களும், அமைப்புகளும்,
அரசுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து தெரிவித்து
வருகின்றனர். உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தையின் பதிலாளர் கர்தினால் Agostino
Vallini வெளியிட்டுள்ள செய்தியில், உரோம் தலத்திருஅவை தனது ஆயரைப் பெறுவதில் மிகுந்த
மகிழ்ச்சியடைகின்றது, வரவிருக்கும் ஆண்டுகளில் நற்செய்தியின் வழிகளில் நம்மை அவர் வழிநடத்துவார்
என்று குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை, அசிசியின் ஏழையான பிரான்சிஸின் பெயரைத் தெரிவுசெய்திருப்பது,
ஒரு வலுவான செய்தியையும், அவரின் திருத்தந்தைப் பணியின் பாங்கையும் எடுத்துரைக்கின்றது
என்றும் கூறியுள்ளார் கர்தினால் Vallini. மேலும், கர்தினால் Giovanni Battista Re
வெளியிட்டுள்ள செய்தியில், புதிய திருத்தந்தை, மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்,
சமூகப் பிரச்சனைகளை அதிகம் தெரிந்தவர் மற்றும் ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்று
கூறியுள்ளார்.