மார்ச்,09,2013. இம்மாதம் 12ம் தேதி, வருகிற செவ்வாயன்று தொடங்கவிருக்கும் கான்கிளேவ்
என்ற அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையின் காலஅட்டவணையை இச்சனிக்கிழமை
நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ
லொம்பார்தி. கான்கிளேவ் அவைக்கு முன்தயாரிப்பாக நடைபெறும் “pro eligendo Romano Pontifice”
என்ற திருப்பலி, வருகிற செவ்வாய் காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
நடைபெறும். இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 115 கர்தினால்கள் செவ்வாய் பிற்பகல்
3.45 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து Pauline சிற்றாலயத்திற்குச் செல்வர்.
அங்கு அவர்கள் தியானம் மற்றும் செபத்தில் ஈடுபடுவர். பின்னர் 4.30 மணிக்கு Pauline
சிற்றாலயத்திலிருந்து Regia அறை வழியாக, தூய ஆவியின் பாடல்பாடிச் செபித்துக் கொண்டே சிஸ்டின்
சிற்றாலயம் சென்று அவரவர் இருக்கையில் அமர்வர். 4.45 மணிக்கு 115 கர்தினால்களும் ஒவ்வொருவராக
உறுதிமொழி எடுப்பர். பின்னர் அந்தக் கான்கிளேவ் அவையோடு தொடர்பில்லாத அனைவரும் வெளியேறுக
என்பதைக் குறிக்கும் Extra omnes! என்று சொல்லப்படும். பின்னர் அப்போஸ்தலிக்கச் சட்ட
அமைப்பின்படி இரண்டாவது தியானச் சிந்தனைகள் வழங்கப்படும். இதனை அகுஸ்தீன் துறவு சபையைச்
சார்ந்த மால்ட்டாவைப் பூர்வீகமாகக் கொண்ட கர்தினால் Prospero Grech வழங்குவார். பின்னர்
முதல் வாக்கெடுப்பு நடைபெறும். மாலை 7.15 மணிக்கு மாலை திருப்புகழ்மாலை செபிக்கப்படும்.
இத்துடன் கர்தினால்கள் சாந்தா மார்த்தா இல்லம் திரும்புவர். மீண்டும் 13ம் தேதி புதனன்று
காலை 6.30க்கு காலை உணவு. 7.45க்கு சிஸ்டின் சிற்றாலயம் செல்லல். 8.15க்குத் திருப்பலி.
9.30க்குத் தியானம். பின்னர் தேர்தல்கள். 12.30க்கு சாந்தா மார்த்தா இல்லம் திரும்புதல்.
1 மணிக்கு மதிய உணவு. மீண்டும் மாலை 4 மணிக்கு சிஸ்டின் சிற்றாலயம் செல்ல்ல். 4.50க்கு
வாக்குப்பதிவுகள். மாலை 7.15க்கு மாலை திருப்புகழ்மாலை. 7.30க்கு சாந்தா மார்த்தா
இல்லம் திரும்புதல். கான்கிளேவ் குறித்த இந்த விபரங்கள் உட்பட மேலும் பல விபரங்களையும்
வழங்கினார் அருள்தந்தை லொம்பார்தி.