சிஸ்டின் சிற்றாலயத்தில் துவக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைக் குறித்து வத்திக்கான் நாளிதழ்
L'Osservatore Romano
மார்ச்,07,2013. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை நடைபெறவிருக்கும்
சிஸ்டின் சிற்றாலயம் மார்ச் 5, இச்செவ்வாய் முதல் மூடப்பட்டு, அங்கு துவக்கப்பட்டுள்ள
ஏற்பாடுகளைக் குறித்து வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoல் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. Roberto
Mignucci மற்றும் Paul Sagretti என்ற இரு பொறியியல் வல்லுனர்கள் தலைமையில் வத்திக்கான்
அருங்காட்சியகப் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த ஏற்பாடுகளை
மேற்கொண்டுள்ளனர். திருத்தந்தைத் தேர்வில் ஈடுபட தகுதியுள்ள 115 கர்தினால்களும் சிற்றாலயத்தைச்
சுற்றி அமரக்கூடிய வகையில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கான்கிளேவ் அவையின் துவக்கத்தில்,
சிற்றாலயத்தின் நடுவில் வைக்கப்படும் விவிலியத்தின் மீது கைவைத்து, கர்தினால்கள் வாக்குறுதிகள்
எடுப்பர். தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் கருப்பு, அல்லது வெள்ளை புகைகளை உருவாக்கும்
அடுப்புக்களும், புகையை ஏந்திச்செல்லும் புகைப்போக்கியும் பொருத்தப்பட்டு வருகின்றன. புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்படும் திருத்தந்தை அமரும் சிறப்பு நாற்காலி ஒன்றும் ஆலயத்தின் நடுவில்
இறுதியில் வைக்கப்படும். இந்த நாற்காலி, 1878ம் ஆண்டு முதல் 1903ம் ஆண்டு வரை தலைமைப்
பொறுப்பில் இருந்த திருத்தந்தை 13ம் லியோ பயன்படுத்திய நாற்காலி.