2013-03-06 15:28:14

புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தவிருக்கும் வாக்கெடுப்புக் கிண்ணத்தைக் குறித்த தகவல்கள்


மார்ச்,06,2013. கான்கிளேவ் கர்தினால்கள் அவையில் புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தவிருக்கும் வாக்கெடுப்புக் கிண்ணத்தின் படங்கள் இச்செவ்வாயன்று பத்திரிக்கையாளர்களுக்குக் காட்டப்பட்டன.
1623ம் ஆண்டு திருத்தந்தை 8ம் உர்பான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட கிண்ணம் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தேர்வு வரை பயன்படுத்தப்பட்டது.
திருத்தந்தை 2ம் ஜான்பால் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் தற்காலத் தேவைகளை மனதில்கொண்டு, மூன்று கிண்ணங்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் கிண்ணங்கள் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் அவர்களின் தேர்வின்போது முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டன.
இதே கிண்ணங்கள் தற்போது பயன்படுத்தப்படும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை அருள்பணியாளர் Federico Lombardi செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
நல்லாயனின் திரு உருவமும், அன்பின் அடையாளங்களான அப்பம், திராட்சைக் கனிகள் தாங்கிய கிளைகள் ஆகிய உருவங்களும் தற்போது பயன்படுத்தப்படும் கிண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஜுபிலி ஆண்டான 2000ம் ஆண்டு, வத்திக்கான் அருங்காட்சியகத்தின் நுழை வாயில் கதவுகளை வடிவமைத்த Cecco Bonanotte என்ற கலைஞரே இக்கிண்ணங்களையும் வடிவமைத்தவர்.
திருப்பீடத்தைச் சார்ந்த செய்திகளைத் திரட்டி வெளியிட 4432 தற்காலிக அனுமதிபெற்றுள்ள பத்திரிக்கையாளர்களும், நிரந்தர அனுமதிபெற்ற 600க்கும் அதிகமான பத்திரிகையாளர்களும் உரோம் நகரில் உள்ளனர் என்றும், இவர்கள் 65 நாடுகளில் இயங்கும் 1004 செய்தி நிறுவனங்களுக்காக 24 மொழிகளில் பணியாற்றிவருகின்றனர் என்றும் அருள் பணியாளர் லோம்பார்தி தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.