மார்ச்,04,2013. அகில உலகத் திருஅவைக்கும் சீனாவுக்கும் இடையே உறவை மேம்படுத்த முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்த முயற்சிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக
அந்நாட்டின் குருக்கள் மற்றும் பொதுநிலையினர் அடங்கிய குழு கடிதம் ஒன்றை முன்னாள் திருத்தந்தைக்கு
அனுப்பியுள்ளது. சீனாவிற்கு தன் இதயத்தில் தனியிடம் கொடுத்து பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து,
சீன மக்களின் துயர்துடைக்க உழைத்ததற்கு, திருத்தந்தைக்கு நன்றி தெரிவிப்பதாக அக்கடிதம்
கூறுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் திருத்தந்தை தங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக
எப்போதும் நட்புணர்வுடன் கூடிய வாழ்த்துக்களையே அனுப்பி வந்ததாகவும், சீன மக்கள் மீது
அவர் வைத்திருந்த நம்பிக்கையை அவரின் செய்திகளில் காண முடிந்தது என்றும் சீன கத்தோலிக்கக்
குழு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.