2013-03-02 15:39:35

அருள்தந்தை லொம்பார்தி : நம்பிக்கை நிறைந்த பிரியாவிடை


மார்ச்02,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப்பணியின் இறுதி நாள்கள், எண்ணற்ற மக்களின் நினைவுகளில் உண்மையிலேயே ஆழமாகப் பதிந்துள்ளன மற்றும் பயணம் செய்யும் திருஅவையின் வரலாற்றில் ஒரு புதிய, முக்கியமான, முன்னோடியான தடத்தை விட்டுச்சென்றுள்ளன என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
தனது இவ்வாரத் தலையங்கத்தில் இவ்வாறு கூறியுள்ள, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி, இந்நாள்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மனித மற்றும் ஆன்மீகத்தைக் கண்டுணர்வதாய்ப் பலருக்கு இருந்தன, மற்றவருக்கு, அவரது தாழ்ச்சியையும், விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றிய அவரது வாழ்வையும் உறுதி செய்வதாய் இருந்தன என்றும் கூறியுள்ளார்.
திருத்தந்தை Wojtyła, (2ம் ஜான் பால்), தனது நோயின் துன்பத்தில் காட்டிய துணிச்சலான விசுவாசச்சான்று வாழ்வு உலகின் கண்களுக்கு முன்னர் அவரது துணிச்சலை வெளிப்படுத்தி, நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அவர் காட்டிய அதே அளவு துணிச்சலையே திருத்தந்தை இராட்சிங்கர் (16ம் பெனடிக்ட்) வெளிப்படுத்தினார் என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, தனது முதிர்ந்த வயதின் வரையறைகளைக் கடவுள்முன்னர் ஏற்றதற்குச் சாட்சியாக திருத்தந்தை இராட்சிங்கர் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
கடவுள் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பைச் செயல்படுத்துவது குறித்து தேர்ந்து தெளிந்ததில் திருத்தந்தை இராட்சிங்கர் நமக்குச் சான்றாக இருக்கிறார் என்றும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
இவ்விரு திருத்தந்தையரும் திருஅவையின் போதனைகளால் மட்டுமல்லாமல், தங்களின் வாழ்வாலும் நமக்குப் பாடங்களைக் கற்றுத் தந்துள்ளார்கள் எனவும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் விட்டுச் சென்றுள்ள மரபுரிமைப் பண்புகள், செபத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே, உங்களுக்கு எனது நன்றி என, தலையங்க்த்தை நிறைவு செய்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.