மார்ச் 02, 2013. கற்றனைத்தூறும்...... குழந்தைகளின் பாதுகாப்பு. சில ஆலோசனைகள்
குழந்தை, தாய்ப்பால் உண்டு வளரும் காலத்தில் தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க
வேண்டியது மிகவும் அவசியம். சின்ன சின்னப் பொருட்களை குழந்தைகள் எடுத்து வாயிலோ மூக்கிலோ
போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள்
கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும். குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக்
கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும். குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு
எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம். கத்தி,
ஊசி, கத்திரிக்கோல், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். தொட்டிகள்
அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள். குழந்தை உள்ளே விழ
வாய்ப்புகள் உண்டு. சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள்.
கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத
உயரத்தில் வைக்கவும். மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றைப் பயன்படுத்திய கையோடு சுவிட்சை
அணைப்பதோடு, இணைப்பையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்குப்
பிடித்த ஒன்று. குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள். துரு பிடித்த
மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். தரையை அடிக்கடி
டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும். குழந்தைகளது
விளையாட்டுப் பொருட்களை அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும். குழந்தை கடித்து
மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளை தலைக்கு மேல்
தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டாதீர்கள்.