கான்கிளேவில் கலந்து கொள்ளவிருக்கும் கர்தினால்களுக்காகச் செபிக்குமாறு கர்தினால் Vallini
அழைப்பு
மார்ச் 01,2013. இந்த பிப்ரவரி 28, இரவு 8 மணியிலிருந்து நமது உரோம் ஆயர் பதவி காலியாக
இருக்கும்வேளை, புதிய உரோம் ஆயரைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் கர்தினால்களுக்காகத் தூயஆவியிடம்
செபிக்குமாறு கர்தினால் Agostini Vallini உரோம் மறைமாவட்ட விசுவாசிகளிடம் கேட்டுள்ளார். உரோம்
மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தையின் பதவி காலியாக இருப்பதைக் குறிப்பிட்டு இவ்வெள்ளியன்று
உரோம் மறைமாவட்ட விசுவாசிகளுக்கு இவ்வாறு பொது வேண்டுகோள் அறிக்கையை விடுத்துள்ளார்,
திருத்தந்தையின் பிரதிநிதியாக, உரோம் மறைமாவட்டத்தை நிர்வாகம் செய்துவரும் கர்தினால்
Vallini. கான்கிளேவ் அவை நடைபெறும் நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு உரோம் புனித
ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், இக்கருத்துக்காகச் சிறப்புத் திருப்பலி இடம்பெறும் என்றும்,
திருப்புகழ்மாலை செபங்களில் சிறப்பாகச் செபிக்குமாறும் கர்தினால் Valliniன் அறிக்கை கூறுகிறது.
உரோமன் கத்தோலிக்கத் தலைவரான திருத்தந்தை குறித்த சரியான மறைக்கல்வியை நடத்துமாறும்,
தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் கர்தினால்
Vallini. அதேசமயம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குத் தனது நன்றியையும்,
பாசத்தையும், செபத்தையும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார் கர்தினால் Vallini. உரோம்
மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ ஆலயம், உரோம் புனித ஜான் இலாத்தரன்
பசிலிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.