2013-02-28 16:20:13

திருத்தந்தையாகிய தங்களுடன் கடந்த எட்டு ஆண்டுகள் பயணம் செய்த எங்கள் உள்ளங்கள் பற்றி எரிந்துள்ளன - கர்தினால் Angelo Sodano


பிப்28,2013. உயிர்த்த இயேசுவுடன் எம்மாவுஸ் நகருக்குப் பயணித்த சீடர்கள் 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?' (லூக்கா 24:32) என்று சொன்னதுபோல், திருத்தந்தையாகிய தங்களுடன் கடந்த எட்டு ஆண்டுகள் பயணம் செய்த எங்கள் உள்ளங்களும் பற்றி எரிந்துள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விலகும் இறுதி நாளான இவ்வியாழன் காலை உரோம் நகரில் தற்போது கூடியுள்ள 144 கர்தினால்களைத் திருத்தந்தை சந்தித்தபோது, கர்தினால்கள் அவையின் தலைவரான கர்தினால் Angelo Sodano, திருத்தந்தைக்கு வாழ்த்தும் நன்றியும் வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
தன்னலமற்ற வகையில் திருஅவைக்கும், மனித சமுதாயத்திற்கும் திருத்தந்தை ஆற்றிய சேவையும், அவரது பணிவும் தங்களுக்குப் பெரும் எடுத்துகாட்டாக இருக்கும் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.
கடந்த சனிக்கிழமையன்று தன் தவக்கால ஆன்மீகப் பயிற்சிகளை முடித்த வேளையில், சகோதர கர்தினால்களுக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும் திருத்தந்தை நன்றி பகர்ந்ததை நினைவுகூர்ந்த கர்தினால் Sodano, உண்மையில் தாங்களே திருத்தந்தைக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.