மரணதண்டனை முற்றிலும் நிறுத்தப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்
பிப்.26,2013. உலகில் மரணதண்டனை நிறைவேற்றும் பழக்கம் முற்றிலும் நிறுத்தப்படுமாறு ஐ.நா.பொதுச்
செயலர் பான் கி மூன் மீண்டும் அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார். மரணதண்டனை நிறைவேற்றும்
பழக்கம் ஐ.நா.வின் பணிகளோடு ஒத்துப்போகவில்லை என்றும், உலகம் முழுவதிலும் இப்பழக்கம்
முற்றிலும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் மனித உரிமைகள் அவையின் உதவித் தலைவர் Kyung-wha
Kang வழங்கிய செய்தியில் பான் கி மூன் கூறியுள்ளார். இன்று உலகில் ஏறக்குறைய 150
நாடுகள் மரணதண்டனை வழங்குவதை நிறுத்தியுள்ளன அல்லது அத்தண்டனையை நடைமுறைப்படுத்தாமல்
உள்ளன என்றும் பான் கி மூன் கூறியுள்ளார். மரணதண்டனை வழங்கும் பழக்கத்தை இரத்து செய்வது
குறித்து ஐ.நா.பொது அவையில் 2007ம் ஆண்டில் முதல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர்
2012ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதில் 111 நாடுகள் ஐ.நாவுக்கு ஆதரவாகவும் 41 நாடுகள் எதிராகவும்
வாக்களித்தன.