Ulemaஇஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது
நாட்டுக்கு நல்லது – பாகிஸ்தான் அமைச்சர்
பிப்.22,2013. பாகிஸ்தானில் ஒற்றுமையை வளர்க்க பாடுபடும் Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான்
அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு முயற்சி என்று பாகிஸ்தான்
அரசில் பணிபுரியும் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார். "வேற்றுமையின் நடுவே இணைந்து
வாழ்வது" என்ற தலைப்பில் இப்புதனன்று இஸ்லாமபாதில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய
பாகிஸ்தான் நாட்டு நல்லிணக்கத் துறையின் தலைவர் Paul Bhatti இவ்வாறு கூறினார். பாகிஸ்தானில்
கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் பல்வேறு வன்முறைகளின் விளைவாக, தன் சகோதரர் Shahbaz
Bhatti உட்பட, 30,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்று கூறிய அமைச்சர் Paul Bhatti,
வெறுப்பை வளர்க்கும் மனப்பான்மையை நாட்டிலிருந்து வேரோடு களைவது அனைவரின் கடமை என்று
வலியுறுத்தினார். Ulema போன்ற இஸ்லாமிய அமைப்புக்கள் வன்முறைக்கு எதிராக எப்போதும்
போராடி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், நாட்டில் வறுமையும், கல்வியின்மையும் நீங்கினால்
பரந்த மனப்பான்மையும் வளரும் என்று எடுத்துரைத்தார்.