திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும்
பிப்.21,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குமுன்,
1972ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மனித இயலை மையமாக்கி, அவர் எழுதிய 14 கட்டுரைகள்
ஒரு நூலாக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Joseph Ratzinger ஒரு
குருவாக, பேராயராக, பின்னர் கர்தினாலாக பணியாற்றிய ஆண்டுகளில் அகில உலக கத்தோலிக்க இதழான
"Communio"வில் வெளியான அவரது கட்டுரைகள், மற்றும் உரைகளின் தொகுப்பிலிருந்து 14 கட்டுரைகள்
தெரிவு செய்யப்பட்டுள்ளன. Hans Urs von Balthasar, Henri de Lubac, Jean-Luc Marion
மற்றும் Joseph Ratzinger ஆகிய இறையியல் அறிஞர்கள் இணைந்து "Communio" என்ற இறையியல்
இதழை 1972ம் ஆண்டு உருவாக்கினர். ஆண்டுக்கு நான்கு முறை வெளியாகும் இவ்விதழில் திருஅவை,
மனித இயல், இறையியல் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.