2013-02-21 15:09:28

கற்றனைத்தூறும்... அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்


எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டிலுள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து நாடுகளில் இந்தக் கப்பல்கள் இருக்கின்றன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அந்தந்த நாடுகளே தயாரிக்கின்றன. டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அக்கப்பல்களில் அடிக்கடி டீசலை நிரப்ப வேண்டியிருக்கும் மற்றும் நீருக்குள் அவை இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. டீசல் எஞ்சின் இயங்குவதற்கு பிராணவாயுவும் தேவை. அதனால் அது நீருக்கு வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்து அதனை இயக்கும்போது அது சப்தத்தை ஏற்படுத்துவதால் எதிரிகளால் அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணுஉலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். அதன்பின்னர் 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்சனையே இருக்காது. இதனால் இது நீருக்குள் இருந்தபடியே உலகைப் பலமுறை சுற்றி வரலாம். இது நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது. இது இயங்குவதற்கு காற்றும் தேவையில்லை. மேலும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இருக்கும். ஒவ்வொன்றின் முகப்பிலும் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா போன்ற நாடுகளிடம் இருக்கின்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், ஐந்தாயிரம் கிலோ மீட்டர்வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.








All the contents on this site are copyrighted ©.