2013-02-20 15:53:19

ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் தவக்காலத்தையொட்டி விடுத்துள்ள அறிக்கை


பிப்.20,2013. ஆப்ரிக்க மக்கள் இன்றைய உலகில் சந்தித்துவரும் சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களில் அக்கறை காட்டாமல், திருஅவை தனித்து இயங்க முடியாது என்று ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் அறிவித்துள்ளன.
அண்மையில் துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, இவ்விரு பேரவைகளும் இணைந்து இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை "ஆப்ரிக்காவில் பொது நலமும், மக்களாட்சி நோக்கிய முயற்சிகளும்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளையும், பொது நலனையும் மதிக்கும்படி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆப்ரிக்க ஆயர்களுக்கு அளித்த Africae Munus என்ற அப்போஸ்தலிக்க மறையுரையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
அரசுத் தலைவர்கள் மற்றும் அரசு வட்டாரங்களில் நிலவும் ஊழலைக் குறித்தும், பன்னாட்டு நிறுவனங்கள் ஆப்ரிக்கக் கண்டத்தின் இயற்கைச் செல்வங்களை சீரழிப்பது குறித்தும் ஆயர்கள் தங்கள் கவலையை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் நலனுக்காக அரசுகள் எடுக்கும் அனைத்து செயல் திட்டங்களிலும் திருஅவை முக்கிய பங்கேற்கும் என்றும் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.