2013-02-16 15:10:18

திருத்தந்தை : IOR நிறுவனத்தைக் கண்காணிக்கும் கர்தினால்கள் குழுவில் மாற்றம்


பிப்.16,2013. IOR என்ற திருப்பீடச் சமயப் பணிகள் நிதி நிறுவனத்தைக் கண்காணிக்கும் கர்தினால்கள் குழுவை இச்சனிக்கிழமையன்று புதுப்பித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் வங்கி எனப் பரவலாக அழைக்கப்படும் IOR நிறுவனத்தைக் கண்காணிக்கும் புதிய கர்தினால்கள் குழு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்படும். இக்குழுவில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பிரேசிலின் São Paulo பேராயர் கர்தினால் Odilo P. Scherer, இந்தியாவின் இராஞ்சிப் பேராயர் கர்தினால் Telesphore P. Toppo, A.P.S.A என்ற திருப்பீட சொத்து நிர்வாகத்துறையின் தலைவர் கர்தினால் Domenico Calcagno ஆகிய நால்வரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்கர்தினால்கள் குழுவில் ஏற்கனவே இருந்த A.I.F நிறுவனத் தலைவர் கர்தினால் Attilio Nicoraவுக்குப் பதிலாக கர்தினால் Domenico Calcagno நியமிக்கப்பட்டுள்ளார்.
I.O.R. நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் புதிய தலைவராக, ஜெர்மன் நாட்டு வழக்கறிஞர் Ernst Freiherr von Freyberg என்பவரை கர்தினால்கள் குழு இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்தது.
இப்பதவிக்கென பரிந்துரைக்கப்பட்ட ஏறக்குறைய 40 பேரின் தொழில் மற்றும் அறநெறி வாழ்வு குறித்து, பல மாதங்களாகத் தீர ஆராய்ந்த பின்னரே Ernst von Freyberg நியமிக்கப்பட்டுள்ளார் என்று திருப்பீடச் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.