2013-02-16 15:05:27

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குவாத்தமாலா அரசுத்தலைவர் சந்திப்பு


பிப்.16,2013. குவாத்தமாலா அரசுத்தலைவர் Otto Fernando Pérez Molinaஐ இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குவாத்தமாலா அரசுத்தலைவர் Pérez Molina.
திருப்பீடத்துக்கும், குவாத்தமாலா நாட்டுக்கும் இடையே நல்லுறவுகள் இருப்பது குறித்து இருதரப்பினரும் இச்சந்திப்பில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இன்னும், குவாத்தமாலா கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக, கல்விக்கும், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிப்பதற்கும் ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர்.
கத்தோலிக்கத் திருஅவையின் சமூக மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக, குவாத்தமாலா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது தலத்திருஅவை ஆற்றிய பிறரன்புச் செயல்களுக்குத் தனது பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
ஏழ்மை, போதைப்பொருள், திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் இவ்விரு தரப்பினரின் ஒத்துழைப்பு வருங்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையும் இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் “ad Limina” சந்திப்பையொட்டி, இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தின் 13 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola அவர்களின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.







All the contents on this site are copyrighted ©.