மாரனைட்ரீதி கர்தினால் : திருத்தந்தையின் பதவி விலகல் அறிவிப்பு திருஅவைக்கும் உலகுக்கும்
அதிர்ச்சி
பிப்.15,2013. வயதைக் காரணம் காட்டி திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதாக அறிவித்திருப்பது,
பொறுப்பான நடத்தைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது என்று லெபனன் மாரனைட்ரீதி கர்தினால்
Béchara Boutros Raï கூறினார். இம்மாதம் 28ம் தேதியோடு திருத்தந்தை பதவி விலகுவதாக
அறிவித்திருப்பது, உலகெங்கும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி இருந்தாலும், நேர்மறையான உணர்வுகளையும்
எழுப்பியுள்ளன என்றுரைத்த கர்தினால் Béchara Raï, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் துணிச்சல்
மற்றும் நேர்மைக்கு மாரனைட்ரீதி தலைமை தலைவணங்குகிறது என்று கூறினார். திருத்தந்தை
தொடங்கி வைத்துள்ள நம்பிக்கை ஆண்டில், அவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது. இவ்வாண்டு புனித வெள்ளியன்று
உரோம் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதைச் சிந்தனைகளைத் தயாரிக்கும் பொறுப்பை லெபனன்
இளையோரிடம் திருத்தந்தை கொடுத்திருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.