WCC தலைவர் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த பார்வை
பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், இந்த முக்கியமான காலத்தில்
கத்தோலிக்கத் திருஅவை வழிநடத்தப்படவும் செபிக்குமாறு உலகக் கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளார்
WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத் தலைவர் பாஸ்டர் Olav Fykse Tveit. திருத்தந்தை
16ம் பெனடிக்ட், பதவி விலகுவதாக அறிவித்துள்ளது, அவர்மீது மிகுந்த மதிப்பையும், பாராட்டையும்
ஏற்படுத்தியுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்டர் Fykse Tveit. மிகவும்
மனிதத்தோடு எடுக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இந்தத் தீர்மானத்தை நாம் முழுமையாய் மதிக்க
வேண்டும் என்றும், எந்த ஒரு மனிதருக்கும் தன்னைக் கவனித்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது,
அதேசமயம், இத்தகைய தீர்மானம் எடுப்பதற்கு ஒரு மனிதருக்கு ஞானமும் பலமும் தேவை என்றும்
அவர் சொல்லியுள்ளார். சரியான கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் வழியாக மட்டுமே, கிறிஸ்தவ
சபைகளிடையே புரிந்துகொள்ளுதலையும் உறவுகளையும் இயலக்கூடியதாய் ஆக்க முடியும் என்ற கண்ணோட்டத்தைத்
திருத்தந்தை கொண்டிருந்தார் என்றும் WCC தலைவர் கூறியுள்ளார்.