மதத் தலைவர்கள் வழியாக உலக அமைதியையும், பெண்களின் சமத்துவத்தையும்
உறுதி செய்யமுடியும் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்
பிப்.14,2013. மதத் தலைவர்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதால், அவர்கள் வழியாக
உலக அமைதியையும், பெண்களின் சமத்துவத்தையும் உறுதி செய்யமுடியும் என்று ஐ.நா. பொதுச்
செயலர் பான் கி மூன் கூறினார். இருபால் சமத்துவமும், பெண்களின் முன்னேற்றமும் என்ற
தலைப்பில் இச்செவ்வாயன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு பான் கி மூன்
அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறினார். மத அடிப்படையில் உருவாகும் பல அமைப்புக்களில்
பெண்களின் பங்கேற்பு அதிகம் இருப்பதால், இந்த அமைப்புக்களை வழிநடத்தும் தலைவர்கள் பெண்களுக்கு
வழங்கப்படவேண்டிய உரிமைகளையும், சமத்துவத்தையும் குறித்து வலியுறுத்த வேண்டும் என்று
பான் கி மூன் தன் செய்தியில் கேட்டுக்கொண்டார். உலக பல்சமய ஒருங்கிணைப்பு வாரத்தின்
ஓர் அங்கமாக, இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், ஐ.நா.
பொதுச் செயலரின் செய்தியை ஐ.நா. உயர் அதிகாரி லக்ஷ்மி பூரி வழங்கினார்.