இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்ல, வேறு
பல வழிகளிலும் வளர்ந்துள்ளது - கர்தினால் Filoni
பிப்.14,2013. கடந்த 130 ஆண்டுகளாக இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி எண்ணிக்கையில்
மட்டுமல்ல, வேறு பல புலங்களிலும் காணக்கூடிய வழிகளில் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது
என்று வத்திக்கான் உயர் அதிகாரி கர்தினால் Fernando Filoni கூறினார். கடந்த ஒரு வாரமாக
இந்தியாவில் தன் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் Filoni, இவ்வியாழன்
மாலை இந்தியாவின் திருப்பீடத் தூதரகத்தில் இந்தியாவின் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும்
சிறப்பு விருந்தினர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். 1884ம் ஆண்டு
திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய திருப்பீடத் தூதரகம் துவங்கி,
இந்தியத் திருஅவையின் வரலாற்றை நினைவு கூர்ந்த கர்தினால் Filoni, கடந்த 130 ஆண்டுகளாக
இத்திருஅவையின் வளர்ச்சி குறித்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினார். இந்தியத் திருஅவையில்
இறை அழைத்தல் வளர்ந்துவருவதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, புதிய
நற்செய்தி அறிவிப்புப்பணியில் இந்தியத் திருஅவை எடுத்துக்காட்டாக விளங்கும் நிலையில்
உள்ளது என்றும் கூறினார். இந்தியத் திருஅவை கல்வி, நலப்பணி, ஆகியத் துறைகளில் இந்திய
சமுதாயத்திற்கு இதுவரை ஆற்றிவந்துள்ள சேவைகளைப் போலவே, இன்னும் பல்வேறு துறைகளில் சிறந்த
பணிகளை அளிக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் கர்தினால் Filoni.