இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என இரத்தத்தில் மூன்று
வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது. இரத்தத்தில்
உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்
பொருள்தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள
அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 இலட்சம்
இரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.
இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்
சத்து தேவை. இரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள்
நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை இரத்த வெள்ளை அணுக்களே. இவை
நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம். உடலில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேறுவதை
இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச்
சுற்றி அடைப்பை ஏற்படுத்தி மேலும் இரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். இரத்தத்தில்
உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் சுமார் 50 விழுக்காடு
அளவுக்கு பிளாஸ்மாவும் 40 விழுக்காடு அளவுக்கு இரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற
அணுக்கள் 10 விழுக்காடு இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள்,
இரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால்
பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள். இரத்தத்தில் மொத்தம்
உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய
வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. ஒரு லிட்டர்
பிளாஸ்மாவுக்கு 2.5 முதல் 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது. எல்லாத்
திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை இரத்தம் செய்கிறது. கொழுப்புச்
சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது.
திசுக்கள் உயிர்வாழ ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் இரத்தம் தான். மூளையின் செல்களுக்கு
ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது இரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு ஆக்சிஜன்
செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். ஒரு சுழற்சியில் இரத்தம் பயணம் செய்யும்
தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! இரத்தத்தில் ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ)
என நான்கு பிரிவுகள் உள்ளன