2013-02-12 16:11:02

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையின் திருநீற்றுப்புதன் திருப்பலி


பிப்.12,2013. பிப்ரவரி 13, இப்புதனன்று தொடங்கும் திருநீற்றுப்புதன் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இப்புதன் உரோம் நேரம் மாலை 5 மணிக்குத் தொடங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் Aventino குன்றிலுள்ள புனித Sabina ஆலயத்தில் திருநீற்றுப்புதன் திருப்பலியை வழக்கமாக நிகழ்த்தும் திருத்தந்தை இவ்வாண்டின் இத்திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்த்துவார் எனத் திருப்பீடம் அறிவித்துள்ளது.
முதுமை காரணமாக, தான் பாப்பிறைப் பதவியிலிருந்து விலகுவதாக இத்திங்களன்று அறிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணிக்கு பதவி விலகுகிறார். தினமும் இரவு 8 மணிக்கு, தனது அன்றாடப் பணிகளை முடிக்கும் திருத்தந்தை, அதன்பின்னர் செபம், தியானம், வாசிப்பு ஆகிய தனிப்பட்ட காரியங்களைச் செய்து உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மார்ச் முதல் தேதியிலிருந்து புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தற்போதைய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் தொடங்கப்படும். திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும்போது அதனை நிர்வாகம் செய்வதற்குப் பொறுப்புடைய Camerlengoவாகச் செயல்படுவதற்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கர்தினால் பெர்த்தோனே அவர்களை 2007ம் ஆண்டில் நியமித்தார்.







All the contents on this site are copyrighted ©.