2013-02-12 16:12:40

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலம் எப்பொழுதும் விண்மீனாகச் சுடர்விடும் : கர்தினால் சொதானோ


பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலம் எப்பொழுதும் விண்மீனாகச் சுடர்விடும் என்று கர்தினால் ஆஞ்சலோ சொதானோ கூறினார்.
இத்திங்கள் காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் தொடங்கிய, மூன்று பேரை புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த கர்தினால்கள் அவை கூட்டத்தின் முடிவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பதவி விலகலை வாசித்து முடித்தவுடன் இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் சொதானோ. வானிலுள்ள விண்மீன்கள் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும், அதேபோல் திருத்தந்தையே, உமது பாப்பிறைப் பணிக்காலம் எம் மத்தியில் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தையின் இந்த அறிவிப்பை ஆச்சரியத்துடனும், ஏறத்தாழ நம்பமுடியா நிலையிலும் தான் கேட்டுக் கொண்டிருந்ததாக உரைத்த, கர்தினால்கள் அவைத் தலைவராகிய கர்தினால் சொதானோ, கடவுளின் புனிதத் திருஅவை மீது திருத்தந்தை எப்பொழுதும் மிகுந்த பாசம் வைத்திருப்பதை உணர முடிகின்றது என்றும் தெரிவித்தார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்று தான் கேட்டதை நினைவுகூர்ந்த கர்தினால் சொதானோ, மரியாவைப் போன்று ஆகட்டும் என்று சொல்லி, திருஅவையின் 2000 ஆண்டு வரலாற்றில் 265வது திருத்தந்தையாகப் பிரகாசமான பாப்பிறைப் பணியை அவர் தொடங்கியதையும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.