திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து திருப்பீடப் பத்திரிகைத்துறை
பிப்.11,2013. இம்மாதம் 28ம் தேதி மாலையில் ஓய்வு பெறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,
அதன்பின் திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சிறிது காலம்
தங்கியிருப்பார் எனவும், அதன் பின்னர் வத்திக்கானுக்கு உள்ளேயுள்ள அடைபட்ட கன்னியர் மடத்தில்
செபம் மற்றும் தியானத்தில் தன் வாழ்வைச் செலவிடுவார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் இயேசு
சபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி கூறினார். ஓய்வு பெறுவதற்கான இந்த முடிவை சுதந்திரமாக
எடுத்துள்ள திருத்தந்தை, அடுத்த பாப்பிறை தேர்தலில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் அருள்தந்தை
லொம்பார்தி தெரிவித்தார். 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் திருத்தந்தையின் தேர்தலில்
கலந்து கொள்ள திருச்சபைச் சட்டம் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வுபெறுவதற்கான
திருத்தந்தையின் இந்த முடிவு குறித்து உலகின் பலபாகங்களிலிருந்தும் திருஅவைத் தந்தையர்கள்
தங்கள் ஆழ்ந்த கவலையையும் செப ஒருமைப்பாட்டையும் வெளியிட்டு செய்திகளை அனுப்பியுள்ளனர். 1415ம்
ஆண்டு திருத்தந்தை 12ம் கிரகரி பதவி விலகியதற்குப்பின், திருத்தந்தை ஒருவர் பதவி விலகுவது
தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.