திருத்தந்தை : தோல்விகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்புப்பணியைச் சோர்வுறச் செய்யக்
கூடாது
பிப்.11,2013. தோல்விகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்புப்பணியைச் சோர்வுறச் செய்யக்
கூடாது, மாறாக, துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். தம்மைப் பின்தொடருமாறு இயேசு, புனித பேதுருவுக்குக்
கூறிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை,
நாம் நம்பிக்கையோடு வலைகளை வீச வேண்டும், அதற்குப்பின் நடப்பதை நம் ஆண்டவர் பார்த்துக்
கொள்வார் என்று கூறினார். தம்மைப் பின்செல்பவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து வெளிவருவதற்கு
தமது வல்லமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதனால் அவர்கள், அவர் விடுக்கும் அழைப்புக்குக்
குறுக்கே நிற்கமாட்டார்கள் எனவும் திருத்தந்தை கூறினார். மீன்பிடித்தல், திருஅவையின்
மறைப்பணியைக் குறித்து நிற்கிறது என்றும், புனித பேதுருவின் அனுபவம் உண்மையிலேயே தனித்துவமிக்கது,
நற்செய்தியை அறிவிப்பதற்கான ஒவ்வொரு திருத்தூதரின் அழைப்பின் பிரதிநிதியாகவும் இவர் இருக்கிறார்
என்றும் கூறினார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், குருத்துவ மற்றும்
அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கான அழைத்தல் குறித்து சிந்திக்கவும் வைக்கின்றது என்ற
திருத்தந்தை, கடவுள் அழைக்கும்போது மனிதர் தங்களின் பலவீனங்களை நினைத்துப் பயப்படக் கூடாது
என்றும் தெரிவித்தார்.