2013-02-09 15:45:08

திருத்தந்தை : மறைசாட்சிய வாழ்வு இன்றி கிறிஸ்தவம் இல்லை


பிப்.09,2013. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப் பின்செல்லாத மற்றும் மறைசாட்சிய வாழ்வை ஏற்காத எவரும் கிறிஸ்தவர் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியாது என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் மறைமாவட்ட குருத்துவக் கல்லூரியின் பாதுகாவலராகிய நம்பிக்கை அன்னைமரி விழாவான இவ்வெள்ளி மாலை அக்குருத்துவக் கல்லூரி சென்று, 190 குருத்துவ மாணவர்களுடன் இறைவார்த்தை விளக்க வழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவில் கொண்டிருக்கும் விசுவாசத்திற்காக விசுவாசிகள் அனுபவித்த பலவித அடக்குமுறைகளையும் துன்பங்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, குருத்துவ அழைப்பை பல இளையோர் தேர்ந்துகொண்டுள்ளது குறித்த மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
கடவுள் கொடுத்துள்ள அழைத்தல் என்னும் இவ்வருளை நினைத்து நாம் மகிழ்ச்சியுற வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுளின் உண்மை, அவரது அன்பின் மகிழ்வு ஆகியவற்றின் நிறைவை இந்தக் குருத்துவ அழைப்பில் காணமுடியும் என்றும் கூறினார்.
புனித பேதுரு முதல் திருமுகம், பிரிவு 1:3-5 வரையுள்ள இறைச்சொற்களை மையமாக வைத்து திருத்தந்தை மறையுரையாற்றினார்.








All the contents on this site are copyrighted ©.