பிப்.09,2013. CCBI என்ற இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவையின் புதியத் தலைவராக, மும்பை
பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேளாங்கண்ணியில்
நடைபெற்றுவரும் CCBI பேரவையின் 25வது பொதுக் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று, அப்பேரவையின்
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால் கிரேசியஸ், CBCI என்ற இந்திய ஆயர்கள்
பேரவையின் தலைவரும், FABC என்ற ஆசிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலருமாவார்.
மேலும், CCBI பேரவையின் உதவித் தலைவர்களாக கோவா பேராயர் Filipe Neri Ferrao, Calicut
ஆயர் Varghese Chakkalakkal ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும்,
CCBI ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் நடைபெற்றுவரும்
ஆயர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட நற்செய்தி
அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni, இச்சனிக்கிழமையன்று வேளாங்கண்ணி
சென்றுள்ளார். சுமார் 126 ஆயர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் இஞ்ஞாயிறு காலை
9 மணிக்கு உரையாற்றுவார் கர்தினால் Filoni.