2013-02-08 15:47:09

கர்தினால் Giovanni Cheliன் இறப்புக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி


பிப்.08,2013. இத்தாலிய கர்தினால் Giovanni Cheli மரணமடைந்ததையொட்டி இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் Asti ஆயர் Francesco Ravinaleக்கு இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இறந்த கர்தினால் Cheliன் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவர் திருஅவையின் பணிகளில் மிகச் சிறந்த ஒத்துழைப்பாளராக இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வியாழன் இரவு இறைபதம் அடைந்த 94 வயதாகும் கர்தினால் Giovanni Cheli, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவைத் தலைவர் உட்பட திருப்பீடத்தில் சில முக்கிய பொறுப்புக்களை வகித்து அவற்றைத் திறமையாகச் செய்தவர் எனப் பாராட்டப்பட்டுள்ளார்.
கர்தினால் Cheliன் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 209. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.
இத்தாலியின் தொரினோவில் 1918ம் ஆண்டு பிறந்த கர்தினால் Cheli, ஆஸ்தி மறைமாவட்டத்துக்கென 1942ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1998ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்







All the contents on this site are copyrighted ©.