2013-02-07 16:00:46

'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் ஜெர்மனியில் ஆரம்பம்


பிப்.07,2013. ஒவ்வோர் ஆண்டும் திருஅவையால் கொண்டாடப்படும் 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் இவ்வியாழன் பிற்பகல் மூன்று மணியளவில் ஜெர்மனியின் Eichstätt-Ingolstadt பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாயின.
'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறிய வார்த்தைகளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கை நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.
பிப்ரவரி 7 இவ்வியாழன் ஆரம்பமாகியுள்ள 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள், பிப்ரவரி 11, வருகிற திங்களன்று கொண்டாடப்படும் லூர்து அன்னை மரியா விழாவன்று, ஆடம்பரத் திருப்பலியுடன் முடிவடையும்.
1992ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'நோயுற்றோருக்கான உலக நாள்' 1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி லூர்து அன்னை மரியா விழாவன்று முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது..
இவ்வாண்டு கொண்டாடப்படும் 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்', ஜெர்மனியின் புகழ்பெற்ற Altötting அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக பேராயர் Zimowski சென்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.