2013-02-06 15:55:44

வழிபாடும், செபமும் மக்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கிறது - கர்தினால் Telespore Toppo


பிப்.06,2013. வழிபாடும், செபமும் மக்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கிறது; எனவேதான், திருஅவையை ஒரு வழிபடும், செபிக்கும் குடும்பம் என்று அழைக்கிறோம் எனக் கூறினார் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவைத் தலைவரான கர்தினால் Telespore Toppo.
பிப்ரவரி 5, இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய தமிழகத்தின் வேளாங்கண்ணி அன்னைமரியா திருத்தலத்தில் நடைபெற்றுவரும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25வது கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Toppo, இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் மக்கள்தொகையினால் உருவாகும் சக்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை அனைத்தையும் ஆயர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர் என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
கடந்து சென்ற 2012ம் ஆண்டில் இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அலசுகையில், ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவுக்கும், ஆண்-பெண் உறவில் காணவேண்டிய சமத்துவத்திற்கும் மக்கள் அளித்த ஆதரவு, நிறைவைத்தரும் ஒரு போக்கு என்று ஆயர்கள் கூறினர்.
சாதி, மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து பாகுபாடுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் பணிபுரியும் வழிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக, CCBI செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கூட்டத்தின் சிறப்பு அம்சங்களாக, CCBI எனப்படும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25ம் ஆண்டு நிறைவும், வேளாங்கண்ணி அன்னை மரியா திருத்தலம் 1962ம் ஆண்டு மைனர் பசிலிக்கா என அறிவிக்கப்பட்டதன் பொன்விழாவும் கொண்டாடப்படுகின்றன.
இந்தப் பொன்விழாவையொட்டி, வேளாங்கண்ணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காலை விடிவெள்ளி ஆலயம் பிப்ரவரி 10, வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் பிரதிநிதியாக இக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்களால் அர்ச்சிக்கப்படும்.








All the contents on this site are copyrighted ©.