2013-02-06 15:17:32

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.06,2013. திருஅவையில் கொண்டாடப்படும் இந்த நம்பிக்கை ஆண்டில் நம் 'விசுவாச அறிக்கை' குறித்து புதன் பொதுமறைபோதகங்களில் எடுத்துரைத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரம், வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு 'வானத்தையும் பூமியையும் படைத்தவர் அவரே' என்ற விசுவாச அறிக்கையின் வார்த்தைகளை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார். இவ்வுலகம் படைக்கப்பட்டதில், இறைவன் எல்லாம் வல்ல தந்தையாக நோக்கப்படுகிறார். தன் முடிவற்ற வார்த்தையினால் நன்மைத்தனமும், இணக்கமும், அழகும் நிரம்பிய ஓர் அகிலத்தைக் கொணர்ந்தார். இறைத்திட்டத்தின் ஒரு பகுதியான உலகம் தனக்கான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. கடவுளின் படைப்புப்பணியின் மணிமகுடமாக ஆணையும் பெண்ணையும் ஏற்றுக்கொள்வதே இறைத்திட்டமாகும். நிலத்தின் மண்ணால் உருவாக்கப்பட்ட மனிதனை தமது சாயலிலும் உருவிலும் இறைவன் படைத்தார் என விவிலியம் நமக்கு எடுத்துரைக்கிறது. மனிதக் குடும்பத்தின் ஒன்றிப்பின் அடிப்படையை மட்டுமல்ல, மனித மாண்பின் மீறமுடியா நிலையையும் நாம் இங்கு காண்கிறோம். இறைவனின் முடிவற்ற திட்டத்தில் ஓர் உன்னதப் பங்கை ஏற்கும்படி அழைக்கப்பட்ட மனிதப் படைப்பின் மறையுண்மை குறித்தும் நாம் அறிய வருகிறோம். நாம் இறைவனுடன் கொண்டிருக்கும் உறவை ஆதாமின் பாவம் பாதிப்படைய வைத்ததன்வழி, மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவும் பாதிப்படைந்துள்ளது. புதிய ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் மீட்பளிக்கும் கீழ்ப்படிதல் மூலம், கடவுள் நம்மை ஏற்று அவரின் அன்புக்குரிய புதல்வர் புதல்விகளாக விடுதலையில் வாழ உதவியுள்ளர்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.