2013-02-05 15:25:19

கற்றனைத் தூறும் 'மோனா லிஸா' ஓவியம்


'புரியாத புன்னகைப் பெண்' என்ற அடைமொழியுடன் உலகெங்கும் புகழ்பெற்றது 'மோனா லிஸா' ஓவியம். 1506ம் ஆண்டு லியோனார்டோ டா வின்சி இந்த ஓவியத்தை வடிவமைத்தபோது, இதற்கு 'La Giaconda' என்று பெயரிடப்பட்டது. Francesco del Giaconda என்ற இத்தாலிய வர்த்தகரின் மனைவி Lisa Gherardiniயின் உருவம் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் மன்னர் முதலாம் Françoisவின் அழைப்பின் பேரில், 1516ம் ஆண்டு ஓவியர் டா வின்சி பிரான்ஸ் சென்றபோது, முழுமையடையாத இந்த ஓவியத்தைத் தன்னுடன் எடுத்துச்சென்றார் என்று சொல்லப்படுகிறது. ஃபிரென்ச் அரசக் குடும்பத்தின் கருவூலமாக இருந்த இந்த ஓவியம், மன்னர் 14ம் லூயி அவர்களால் அருங்காட்சியகத்திற்குப் பரிசாக அளிக்கப்பட்டது. நாளடைவில் இந்த ஓவியம் ma donna Lisa அதாவது, Madam Lisa என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டது. Ma donna என்ற வார்த்தைகள் Mona என்று மாறி, இன்று இந்த ஓவியம் Mona Lisa என்றே அழைக்கப்படுகிறது.
அக்காலத்தில் செல்வந்தர் குடும்பத்து பெண்கள் தங்கள் கண் புருவங்களை மழித்து விடுவது நாகரீகம் என்று கருதப்பட்டதால், இந்த ஓவியத்தில் உள்ள பெண்ணுக்கும் கண் புருவங்கள் இல்லை. ஆனால், டா வின்சி இதை வரைந்தபோது, கண் புருவங்களுடன் வரைந்ததாகவும் ஓவிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக ஓவியங்களில் அதிக அளவு ஆய்வு செய்யப்பட்டுவரும் ஓவியம் Mona Lisa ஓவியமே என்பது ஒரு பரவலான கருத்து.
1911ம் ஆண்டு இந்த ஓவியம் திருடப்பட்டு, மீண்டும் 1913ம் ஆண்டு மீட்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, பாதுகாப்பு கருதி, இந்த ஓவியம் அருங்காட்சியகத்திலிருந்து நீக்கப்பட்டது. 1956, 1974, 2009 ஆகிய ஆண்டுகளில் இந்த ஓவியத்தைச் சிதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரிஸ் மாநகரில் Louvre அருங்காட்சியகத்தின் மிக விலை உயர்ந்த கருவூலமாக இந்த ஓவியம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.