எரிசக்தி தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், கிறிஸ்தவ சபைகள்
வேண்டுகோள்
பிப்.04,2013. எரிசக்தி தயாரிப்பு வழிமுறைகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இங்கிலாந்தில் இத்திருநீற்றுப்புதனன்று விழிப்புணர்வு
போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக கிறிஸ்தவ சபைகள் அறிவித்துள்ளன. எரிசக்தி தயாரிப்பில்
கார்பன் வெளிப்பாடு அதிகமாகி, காற்றில் கலப்பது குறித்து கவலையின்றி செயல்படும் இங்கிலாந்து
அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய சட்ட வரைவை முன்வைக்க வேண்டும் எனக்கூறும்
அந்நாட்டின் கிறிஸ்தவ அவைகளின் பிறரன்பு அமைப்பான Operation Noah, தங்கள் கடந்த கால
தவறுகளுக்குக் கழுவாய் தேட அரசுக்கு திருநீற்றுப்புதன் சிறந்த நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இயற்கையைக் காக்கவேண்டிய சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குறுகியக் கண்ணோட்டத்துடன்
இங்கிலாந்து அரசு செயல்படுவது குறித்தும் இப்பிறரன்பு அமைப்பு குறைகூறியுள்ளது.