இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்குப் பாரபட்சம்
சன.30,2013. இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழ்க் கிராமங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதைக்
கண்டித்து வவுனியாவில் இப்புதனன்று கண்டனப் பேரணியொன்று நடத்தப்பட்டது. மாவட்ட மீள்குடியமர்ந்தோர்
நலன் பேணும் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. வவுனியா அரசு செயலகத்தை அடைந்த
பேரணியின் முக்கியப் பிரதிநிதிகள் அரசுத்தலைவருக்கு எழுதப்பட்ட விண்ணப்பம் ஒன்றை வவுனியா
ஆளுனரிடம் கையளித்தனர். இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் 50,000 வீட்டுத்
திட்டத்தால் பயனடைவோரைத் தெரிவு செய்வதில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் ஏனைய அரசு அதிகாரிகளும்
பாரபட்சமாகச் செயற்பட்டு வருகின்றனர் என்று அந்த விண்ணப்பத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. விண்ணப்பத்தைப்
பெற்றுக்கொண்ட ஆளுனர், தமிழர் தரப்பினருடைய குறைகள், கோரிக்கைகள் என்பவற்றை விரிவாகக்
கேட்டறிந்ததுடன், அது குறித்து விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தம்மிடம்
உறுதியளித்துள்ளதாக மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் பொன்னையா
தனஞ்சயநாதன் தெரிவித்தார்.