பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்துவதற்குப் புதுடெல்லியில் கத்தோலிக்கக் குழுக்கள்
ஊர்வலம்
சன.29,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் நோக்கத்தில், இப்புதனன்று கத்தோலிக்கக் குழுக்கள் புதுடெல்லியில் ஊர்வலம்
நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன. இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு, டெல்லி
உயர்மறைமாவட்டம் மற்றும் பிற கிறிஸ்தவ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், வட இந்திய ஆயர்
பேரவை(RBCN), மகாத்மா காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாளான சனவரி 30ம் தேதியன்று
டெல்லி ராஜ்காட்டில் இந்த ஊர்வலத்தை நடத்தவுள்ளது. இளையோர் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை
விதைக்கும் செயல்திட்டங்களை வகுக்குமாறு, அனைத்துப் பங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும்
பிற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கத்தோலிக்கக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த
ஊர்வலம் குறித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி துணை ஆயர் பிராங்கோ மூலக்கல்,
இந்தியாவின் 50 விழுக்காட்டு மக்களுக்குப் பாதுகாப்பான இடத்தை வழங்குவது நமது கடமையும்
பொறுப்பும் ஆகும் என்று கூறியுள்ளார்.