இந்தோனேசியாவின் புதிய விதிமுறைகளுக்கு ஆயர்கள் ஆதரவு
சன,29,2013. இந்தோனேசியாவில் சமூக மற்றும் சமயக் கலவரங்களை நிறுத்துவதற்கு அந்நாட்டில்
கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 ஆயிரத்துக்கு
மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவின் உறுதியான தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற
சமூக மற்றும் சமயக் கலவரங்களை நிறுத்துவதற்கும், தடை செய்வதற்குமென உருவாக்கப்பட்டுள்ள
புதிய விதிமுறைகளில் அந்நாட்டின் அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyono இத்திங்களன்று
கையெழுத்திட்டார். மத்திய அரசு, உள்ளூர் அரசு அதிகாரிகள், காவல்துறை, இராணுவம் ஆகியவைகளுக்கு
இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்தப் புதிய விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2012ம்
ஆண்டில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற சமூக மற்றும் சமயக் கலவரங்களும், பயங்கரவாதத் தாக்குதல்களும்,
வன்முறைகளும், கிளர்ச்சிகளுமே இப்புதிய முயற்சிக்குக் காரணம் என்று அரசுத்தலைவர் Yudhoyono
விளக்கியுள்ளார்.