திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்பட செபம்
சன.25,2013. இறைவனின் மீட்புத் திட்டத்தில் மிக முக்கியமான இடமாக இருந்த மத்திய கிழக்குப்
பகுதி, வருங்காலத்தில் நீதியையும் நிலைத்த அமைதியையும் அனுபவிப்பதற்கு, அப்பகுதி ஆக்கப்பூர்வமான
உரையாடல் மற்றும் ஒத்துழைப்புப் பாதையில் வழிநடத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கத்தோலிக்கத் திருஅவை மற்றும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ்
சபைகளுக்கு இடையே இறையியல் உரையாடலுக்கானப் பன்னாட்டுக் குழுவின் 30 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமையன்று
திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மத்திய கிழக்குப் பகுதி விசுவாசிகளுடன் ஆன்மீகரீதியில்
தான் மிக நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பன்னாட்டுக் குழுவில் பலர்,
கிறிஸ்தவர்கள், தனியாகவும், சமூகமாகவும் துன்புறும் பகுதிகளிலிருந்து வந்திருப்பதைக்
குறிப்பிட்ட அவர், துன்புறும் கிறிஸ்தவர்களின் நிலைமை நம் அனைவருக்கும் மிகுந்த கவலை
தருகின்றது என்றும் கூறினார் கிறிஸ்தவ வரலாற்றில் முதல் 500 ஆண்டுகள், கிறிஸ்தவர்களுக்கு
இடையே முழு ஒன்றிப்பும், உறவுகளும் இருந்தது குறித்து, இக்குழு, இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு
வாரத்தில் ஆய்வு செய்துள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவை மற்றும்
கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே நிலவும் உறவுகள், சகோதரத்துவ ஒத்துழைப்பில் தொடர்ந்து
வளருமாறும் ஊக்குவித்தார். இம்மாதம் 18ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்,
இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.