ஒடிஸ்ஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்காமல்
வாழ்கின்றனர் - கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா
சன.24,2013. ஒடிஸ்ஸாவின் தலத் திருஅவை, சாதி, மதம் ஆகிய பாகுபாடுகளைக் கடந்து பணியாற்றுவதால்,
அங்கு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை இன்னும் இழக்காமல் வாழ்கின்றனர்
என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த
பேராயர் பார்வா, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், நடைபெற்றுவரும் நம்பிக்கை
ஆண்டில், பிரிவுகள் ஏதுமின்றி திருஅவை வளர வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினார். ஒடிஸ்ஸா
கிறிஸ்தவ சமுதாயம், தலித், பழங்குடியினர் எனவும், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் எனவும் பிரிந்து
கிடக்கிறது என்பதை எடுத்துரைத்த பேராயர் பார்வா, இந்தப் பிரிவுகளை நீக்க மேற்கொள்ளப்பட்டுள்ள
முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார்.கடந்த நூறு ஆண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவை மற்றும்
பிற கிறிஸ்துவ சபை பணியாளர்களின் அயராத உழைப்பால் பழங்குடியினரின் வாழ்வு முன்னேற்றம்
கண்டுள்ளது என்றும், இந்த முன்னேற்றத்தை இன்னும் வளர்ப்பது இன்றைய சமுதாயத்தின் கடமை
என்றும் பேராயர் பார்வா வலியுறுத்தினார்.