2013-01-23 15:36:57

குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில - கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழக முயற்சியின் தொடர்ச்சி


சன.23,2013. குருக்களால் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானவர்கள் நலம் பெறும் வகையில் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில’ என்ற மையக் கருத்துடன் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி முடிய நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்விதம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி கூட்டம் ஒன்று நடைபெறும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கின் முடிவுகள் இத்தாலியம், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம், உட்பட எட்டு மொழிகளில் வெளியிடப்படும் என்றும், பிரெஞ்ச், போர்த்துகீசியம் உட்பட இன்னும் நான்கு மொழிகளில் விரைவில் இத்தொகுப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவையில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், கணணித் தொழில்நுட்பம், மற்றும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி, அவற்றை உடனுக்குடன் அடையாளம் கண்டு, களைவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.