2013-01-21 15:50:28

ஒரேபாலினத் திருமணங்களை எதிர்க்க விசுவாசிகளின் ஆதரவை நாடும் இங்கிலாந்து திருஅவை


சன.21,2013. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்க விழையும் இங்கிலாந்து அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கத்தோலிக்க விசுவாசிகள், தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கருத்துக்கடிதங்களை அனுப்பவேண்டும் என அஞ்சல் அட்டைகளை விநியோகித்து வருகிறது இங்கிலாந்து திருஅவை.
வருகின்ற சனிக்கிழமை முதல் ஒவ்வொரு பங்குத்தளத்திலும் அஞ்சல் அட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கென வைக்கப்படும் என்று கூறிய தலத்திருஅவை அதிகாரிகள், ஒரே பாலினத்திருமணத்தை அங்கீகரிக்கும் புதிய சட்டம் மூலம், திருமணத்தின் உண்மை அர்த்தம் மாற்றம் பெறுவதுடன், திருமணத்திற்கும் குழந்தை பிறப்புக்கும் இடையே இருக்கவேண்டிய அடிப்படைத் தொடர்பு முறிவுபடும் என்பது உட்பட பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகையதொரு புதியச் சட்டத்தை ஆதரிப்பதாக எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியும் கடந்ததேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடாத நிலையில், தற்போது இத்தகைய சட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.