2013-01-19 15:38:07

பாதரசக் கனிமம் குறித்த சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கு நாடுகள் இசைவு


சன.19,2013. பாதரசக் கனிமத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகேட்டை குறைப்பதற்கான சட்டரீதியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு 140க்கும் மேற்பட்ட நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன.
மனிதரின் நலவாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கும் பாதரசக் கனிமத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து விவாதித்த நாடுகளின் பிரதிநிதிகள், சட்டரீதியான விதிமுறைகளுக்கு இசைவு தெரிவித்தனர்.
ஜெனீவாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்ட இப்பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
உலகில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதையொட்டி சிறிய அளவிலானத் தங்கச் சுரங்கங்களும் அதிகரித்து வருகின்றன. அதிக அளவில் நச்சுதன்மை கொண்ட பாதரசம், தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
260 டன்கள் பாதரசம் ஆறுகளிலும் ஏரிகளிலும் கொட்டப்பட்டுள்ளன என்றும், உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பில் காணப்படும் பாதரசத்தின் அளவு கடந்த நூற்றாண்டில் 100 மீட்டராக உயர்ந்துள்ளது என்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.